பாதுகாப்பாக வாழ தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள்-ஜீவன் தொண்டமான்

இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு சென்றுள்ளது.

இதேவேளை மலையகத்தை பொறுத்த வரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரதேசங்களில் செறிந்து வாழ்ந்தாலும் இத்தொற்று தொடர்பில் அவர்களின் பாதுகாப்பிற்காக தற்போது பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் அடிப்படையில் செப்டெம்பர் மாதம் இறுதிற்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற மாதாந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கம் முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகளை மாத்திரம் வழங்கியிருந்தது . அதன் பின்னராக நாம் 50,000 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோம்.

இதன்படி 168,406 தடுப்பூசிகளை மக்கள் இதுவரையிலும் முழுமையாக பெற்றுள்ளார்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 96 வீதமும், ஆசிரியர்கள் 99 வீதமும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் இறந்து விடுவார்கள் என சமூக வலைத்தளங்களிலும் ஏனையோர்களது தவறான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் நிலவி வந்தன. எனினும் அது உண்மைக்கு புறம்பான பொய்யான வதந்தியாகும். எனவே மக்கள் தமது நலன்களில் அக்கறை கொண்டு பாதுகாப்பாக வாழ இத்தடுப்பூசிகளை பெற்றுகொள்வது அவசியமாகும்.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் 3 இலட்சம் தடுப்பூசிகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும்.

அண்மையில் மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது. இதற்கு மாற்று நடவடிக்கையாக எமது தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் ஊடாகவும் , பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகம் அவர்களுக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய எதிர்வரும் வியாழக்கிழமை டயகமைக்கு நாம் நேரடியாக சென்று நினைவேந்தலாக மெழுகுவர்த்தியை ஏற்றி மௌன அஞ்சலியை நாம் செலுத்த வேண்டும். அத்தோடு மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply