மட்டக்களப்பில் பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில் அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மக்களும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

எரிபொருட்கள் வழங்கப்படுகின்ற போதிலும் போதியளவு எரிபொருட்கள் வழங்கப்படாத காரணத்தினால் தினமும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் எரிபொருட்கள் வரும் வரையில் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்ற வெளியான அநாமதேய தகவல்களையடுத்து பெருமளவானோர் இன்று மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இதேநேரம் இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்ததை காணமுடிந்தது.

சில இடங்களில் பொதுமக்களினால் அசௌகரியங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாரினால் அவை சீர்படுத்தப்பட்டமையினையும் காணமுடிந்தது.

எவ்வாறாயினும் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அடிமட்ட உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் தினக்கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *