
ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டாலே இந்த நாடு சிறப்பாக இருக்கும் என புலொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலை தொடர்பில், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள்ளார்.
நாட்டை நிர்வகிப்பதற்கு திறமை இல்லை அல்லது அனுபவம் போதாத காரணத்தால் மக்கள் இன்று வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர். தமிழ், சிங்கள,முஸ்லீம் மக்கள் என்று இல்லாமல் எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், இன்னமும் சில காலங்களில் உணவுத் தட்டுப்பாடு வரலாம், மக்கள் உணவை திருடும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த அரசு இன்னமும் திருந்தவில்லை. கோட்டா அரசு வீட்டுக்கு செல்வதால் நாட்டு பிரச்சினை தீராது. அடுத்த வரும் ஆட்சியாளர்கள் இதனை உடனடியாக தீர்க்க முடியாது. ஆகவே எதிர்க்கட்சிகள் மக்கள் எல்லோரும் சேர்ந்து செயற்பட வேண்டும். அதற்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுக்க வேண்டும். நம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து பெளத்த சிங்கள ஆதிக்கத்தை மேலோங்க வைப்பதற்கு நினைத்தால் நாடு மீண்டும் பாதாளம் நோக்கி செல்லும். ஜனாதிபதி முறைமை என்ற ஒன்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற முறைமை வேண்டும், ஆட்சியாளர்களின் மனநிலை மாற வேண்டும்.- என்றார்.