ராஜபக்சக்கள் சூறையாடி சுருட்டிய டொலர்களை எங்களது ஆட்சியில் மீட்போம்! – சஜித் சூளுரை

நாட்டை சூறையாடி ராஜபக்சக்களின் பொக்கற்றுக்குள் சுருட்டிய டொலர்களை எங்களது ஆட்சி மலரும் போது வெளியே கொண்டுவருவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் இல்லை என்கின்றனர். ஆனாலும் நிறையவே டொலர் உள்ளது. அது ஆட்சியாளர்களின் பொக்கற்றுக்களில் உள்ளது. எங்களது ஆட்சி மலரும் பட்சத்தில் அவர்களின் பொக்கற்றுக்களில் உள்ள டொலரை வெளியே கொண்டு வருவோம்.

நாட்டை சூறையாடி நாட்டு மக்களை வீதியில் அலையவிட்டவர்களை நீதியின் முன்நிறுத்தி நாட்டை பழைய நிலைக்கு கொண்டுவருவோம் என எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான ஜக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் வி.வினோகாந்தின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தந்த அவர் ஜக்கிய மக்கள் சக்தியின் ‘சுவாசம்’ எனும் திட்டத்தின் கீழாக பெறப்பட்ட 21 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டை கட்டியாள வேண்டிய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமானதொரு ஆட்சியை புரிந்து வருகின்றனர். இந்த நாட்டிலே ஆட்சியாளர்களால் நடைபெறும் களவு பொய் வஞ்சகம் சூறையாடல் போன்ற தாக்கம் காரணமாக நாடு அதளபாதாளத்தை நோக்கி செல்கின்றது.

எங்கு சென்றாலும் எரிவாயுவிற்கு வரிசை, பெற்றோல் , டீசலுக்கு வரிசை, பிள்ளைகளுக்கான மாவிற்கு வரிசை, விவசாயிகள் பசளைக்கு வரிசை, சீனிக்கு பருப்புக்கு வரிசை, அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சிதைவடைந்துள்ளது.

இந்த அரசாங்கத்தின் மிகவும் கீழ்த்தரமான அரசியல் காரணமாகவே இந்த நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாது செய்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர் என்றார்.

வைத்தியசாலைக்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு வைத்தியசாலை நிருவாகம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு பொதுமக்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.

இதன் பின்னர் வைத்திய உபகரணங்கள் வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் சஜித் பிரேமதாச பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், குறித்த வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த ஜக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் வி.வினோகாந்திற்கு வைத்தியசாலை நிருவாகம் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பி.தயாரெட்ண வைத்தியாசாலை பொறுப்பதிகாரி யு.எல்.சகீல் வைத்தியர் குணாளினி சிவராஜ் வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் வைத்தியர் சித்ரா தேவராஜன் ஜக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *