
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடாது யாரும் கிராமத்துக்கு திரும்ப வேண்டாம் என்ற ஒரு போராட்டமும் நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேபோன்று ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் கையொப்பமிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இவை இரண்டிலும் கையொப்பமிடாது ஒருவரும் கிராமத்துக்கு திரும்பக் கூடாது என்ற போராட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் இளம் சந்ததி வீதிக்கி இறங்கி முழக்கமிடும் ஒரே கோஷமாக கோட்டா கோ ஹோம் என்ற கோஷமே அமைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர் சமூகமும் பொதுமக்களும் இணைந்து இந்த கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கு இருக்கின்றார் என்று எமக்கு தெரியவில்லை. அவர் வீட்டிலிருக்கின்றாரா என்று தெரிவில்லை. இராணுவ முகாமிலேயே அதிகளவான நேரத்தை செலவழிப்பதாக தகவல் உள்ளது.
தற்போதைய நிலையில் இராணுவத் தளபதியின் பாதுகாப்புக்கு மத்தியில் குடும்பத்துடன் ஜனாதிபதி இராணுவ முகமொன்றில் தங்கியிருக்கின்றா என்றும் கேள்வி எழுகின்றது.
இந்த போராட்டங்களுக்கு மத்தியில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலகி செல்வார்கள் என்று யாரேனும் நினைத்தால் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.