
தற்போதைய நிலையில் இளைஞர் எழுச்சி போராட்டம் இடம்பெறும் பூமியில் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுச நாணயக்கார, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் விசேட காணொளிப் பதிவை வெளியிட்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்ட பூமிக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கான பொலிஸ் வாகனங்களைக் குவித்து அல்லது 3ஜி, 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்து ஆர்ப்பாட்ட பூமிக்கு வருவோரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்ட பூமிக்கு வருபவர்கள் அச்சம் கொள்ளாதீர்கள், தற்போதைய நிலையில் ராஜபக்ஷர்கள் அச்சம்கொண்டுள்ளனர். சகலரும் ஒளிந்துள்ளனர். அதேபோன்று சில தரப்பினர் ஹெலிகொப்டர்களில் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
எனவே இவர்கள் தற்போது அச்சமடைந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாகவே ராஜபக்ஷர்களை வீடுகளுக்குள் முடக்க நேர்ந்தது.
எனவே இந்த போராட்டத்தை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுங்கள். எதற்காகவும் அச்சங்கொள்ள வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.