
ஜனாதிபதி கோட்டபாய வெளியேறினால் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் சீராகுமா? என பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்கினேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமை பற்றிய சிவில் அமைப்புக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
இன்று இலங்கைத் தீவானது என்றும் காணாத பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. முக்கியமாக கொழும்பில் ஜனாதிபதி கோத்தாபயவையும் அவரின் சகோதரர்களையும் பதவி விலக வேண்டும் என்ற கூச்சலும் கூப்பாடும் வானை அதிர வைக்கின்றன.
வடகிழக்குத் தமிழ் மக்கள் 30 வருட கால போர்க் காலத்தின் போது அனுபவித்த அவலங்களின் அளவுக்குத் தென்பகுதி மக்கள் இதுவரை அனுபவிக்காவிட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டின் நிமித்தமும் அவற்றின் விலைகள் வெகுவாக எகிறியதன் காரணமாகவும் அவர்களின் கோபம் ஜனாதிபதி மேல் காட்டப்பட்டு வருகின்றது.
போரின் போது சட்ட முறையற்ற அவரின் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. இன்று அவரை சிங்கள மக்களே வெளியேறு என்று கூறும் போது ‘முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்’ என்ற முதுமொழி நினைவுக்கு வருகின்றது.
இன்றைய இந்தக் கூட்டம் எமது இனிமேலான நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஆராயும் முகமாக நடைபெறுகின்றது.
இரண்டு கேள்விகளுக்கு நாங்கள் விடை காண வேண்டியுள்ளது.
- கோதாபய வெளியேறினால் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் சீராகுமா? என்பது.
- அடுத்து என்ன என்பது அடுத்த கேள்வி.
எங்களுக்கு கோதாபய வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் போகின்றதால் எமது பொருளாதாரப் பிரச்சனை தீருமா? அரசியல் பிரச்சனை தீருமா? அங்கு தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். - கோதாபய இயற்கையிலேயே பல குறைபாடுகளைக் கொண்டிருப்பது ஒரு புறம். ஆனால் அப்பேர்ப்பட்டவரை நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக்கிய மடமை மறுபுறம்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மாற்றினால் அன்றி கோதாபய போனாலும் அடுத்து வருபவரும் இவரைப் போலத் தான்தோன்றித் தனமாக இயங்கமுடியும் என்பதை நாம் மறுத்தலாகாது. எனவே ‘கோதாபய வெளியேறு’ என்று தென்புற மக்கள் கோஷம் எழுப்பும் போது சமாந்திரமாக அதே நேரத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கு என்று நாம் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையினரது அதிகாரங்களை மீறி ஜனாதிபதி எதேச்சாதிகாரமாக நடக்க 20 வது திருத்தச் சட்டம் இடமளித்துள்ளது. - அரச சேவையில் இருக்கும் ஏதேனும் ஒரு பதவிக்கு மக்கள் பிரதிநிதிகளின் இசைவைப் பெறாமல் யாரை வேண்டுமானாலும் நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்த்தான் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பலரை சிவில் பதவிகளுக்கு ஜனாதிபதி கோதாபய நியமிக்கக் கூடியதாக இருந்தது. மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு கூட அவர் தம்மைச் சார்ந்தவர்களையே நியமித்துள்ளார். இன்று தான் பத்திரிகையில் படித்தேன். ஒரு வெளிநாட்டு இராஜதந்திர பதவிக்கு சினிமாவில் நடிக்கும் ஒரு சிங்கள ஹாஸ்ய நடிகரை நியமிக்க உள்ளார் என்று. அவரின் ஒரேயொரு தகைமை ஜனாதிபதியை சென்ற தேர்தலின் போது அவர் ஆதரித்தார் என்பது தான்.
ஒரு நாட்டின் அதிகாரங்கள் சட்டமியற்றல், சட்டத்தை நிறைவேற்றல், சட்டத்தை வெளிப்படுத்தல் ஆகிய மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பிரிந்திருந்து அவற்றிற்குரியவர்கள் தங்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பது ஜனநாயக முறைமையின் எதிர்பார்ப்பு. 20வது திருத்தமோ நிறைவேற்றல் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு கூடிய அதிகாரங்களை வழங்கி மூன்று அங்கங்களின் சமநிலைக்கு ஊறு விளைவித்துள்ளது. பாராளுமன்றம் கூடும் போது மக்கட் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் 20ந் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பொறுப்புக் கூறல், வெளிப்படைத் தன்மை போன்றவற்றை முதனிலைப்படுத்தாமல் நடவடிக்கைகளை எடுக்க 20வது திருத்தச் சட்டம் இடமளித்துள்ளது.
அடுத்து அவர் பதவியில் இருக்கும் போது சகல சட்ட ரீதியான நடவடிக்கைகளிலும் இருந்து நிறைவேற்று ஜனாதிபதியானவர் விலக்களிக்கப்பட்டுள்ளார்.
இதனை நாங்கள் மனதிற்கெடுத்தோமானால் இவ்வளவு பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் அவருக்கு எதிரான தனிப்பட்ட செயற்பாடுகளின் பின்னர் கூட ஏன் அவர் பதவி விலகாமல் இருக்கின்றார் என்றால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஆகிவிடும் என்பதனாலேயே. அவர் பதவி துறந்தால் நாட்டை விட்டு வெளியேற முடியாது போய்விடும். ஆகவே அவர் பதவியில் தொடர்ந்திருக்கவே பார்ப்பார். வெளியேற எத்தனிக்கமாட்டார்.
ஆனால் பாராளுமன்றம் 20ந் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டால் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் கீழ் பொது மக்கள் அவருக்கு எதிராக வழக்குகள் பதிய முடியும்.
எனவே இன்று நாங்கள் ‘கோதாபய போ’ என்ற கோஷத்திற்கு மேலதிகமாக ‘பாராளுமன்றமே! நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை உடனே நீக்கு’ என்ற கோஷத்தையும் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.