பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் அகதி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தங்கியிருந்த இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மூடப்பட்டிருந்த கழிப்பறையில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கழிப்பறை சென்றசமயம் அங்கு தவறி வீழ்ந்து தலையில் காயமடைந்துள்ளார் என்றும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார் என்பதையும் அங்கு அவரோடு தங்கியிருந்த ஈழத்தமிழ் அகதிகள் சிலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தனித்து வாழ்ந்து வந்த அவரது உடலைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அனுப்பிவைக்கின்ற நடவடிக்கைகளை அங்கு இயங்குகின்ற செஞ்சிலுவைச் சங்கம்மேற்கொண்டுள்ளது.
சேந்தனுக்கு இறுதிஅஞ்சலி செலுத்த வருமாறு அங்குள்ளதமிழ் அகதிகளுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன என்று அகதி ஒருவர் தெரிவித்தார். ரியூனியன் தீவுக்கு வந்த படகு அகதிகள்160 பேரில் சுமார் அரைப்பங்கினர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

ஏனையோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களில் சிலருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அனுமதிமறுக்கப்பட்டவர்கள் பலர் மேன்முறையீடுசெய்து விட்டு இன்னமும் அங்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *