பொதுமக்களால் எழுப்பப்பட்ட கவலையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு- காலி முகத்திடலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட புதிய என்டெனா கோபுரத்தை அகற்றியுள்ளதாக டயலொக் நிறுவனம் அறிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் திறன் மேம்படுத்தல் தீர்வு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பியுள்ள விடயங்களை கருத்தில் கொண்டும், அதற்கு மதிப்பளித்தும், டயலொக் எண்டெனா கோபுர கட்டமைப்பை நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக டயலொக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவலின் ஒரே நோக்கம் காலி முகத்திடல் பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதாகும் என்பதை டயலொக் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அந்த பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டயலொக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
முன்னதாக காலி முத்திடலில் 6 மீ (20 அடி) தூண் என்டெனா கோபுர கட்டமைப்பை நிறுவியுள்ளதாக டயலொக் நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், குறித்த பகுதியில் எதிர்நோக்கும் வலையமைப்பு நெரிசலைத் தணிக்க செயல்படுத்தப்படும் தீர்வுகளில் ஒன்றாகும் என்றும் நிறுவனம் கூறியிருந்தது.இதற்கிடையில் அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
