அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரை கடலலையில் சிக்கி, காணாமல் சென்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டார்.
அதே வேளை, மாயமான இரு மாணவர்களின் சடலங்கள் மறுநாள் புதன்கிழமை (11) மாலை மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 18 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே, இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை மாணவர்களான முகமது பைரூஸ், வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


