தனது தாத்தாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பேரன்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் செட்டியார் (71). பிஎஸ்என்எல் அதிகாரியாக வேலை பார்த்து தற்போது பணி ஓய்வு பெற்றதால் வீட்டில் இருக்கிறார்.

அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கிருஷ்ணன் செட்டியாருக்கு தூரத்து உறவு முறையில் பேரன் முறை ஆகும். ஆகவே கார்த்திக்கு அடிக்கடி தாத்தாவிடம் போனில் பேசி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தாத்தாவிடம் அடிக்கடி தனக்கு பணம் கேட்டும் தொல்லை செய்துள்ளார். ஆனால் எதற்கும் மசியாத கிருஷ்ணன் செட்டியார் பேரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதனால் திடீரென கார்த்திக் சென்னையிலிருந்து கிளம்பி நாகர்கோவிலுக்கு வந்து நேற்று மாலை கிருஷ்ணன் செட்டியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றும் தாத்தாவிடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடவே அவர் பணம் தர மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாவை சரமாரியாக குத்தினார்.

அதில் தாத்தாவுக்கு கை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் கிருஷ்ணன் செட்டியார் சரிந்து மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் காயத்துடன் கிடந்த கிருஷ்ணன் செட்டியார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து கிருஷ்ணன் செட்டியார் கோட்டார் காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பணத்திற்காக தாத்தாவை பேரன் கத்தியால் குத்தி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *