ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து, புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார்.
அவரது நியமனம் பலத்த சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது.
2 வருடங்களின் முன்னர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அவரது கட்சி வரலாற்றில் இல்லாதளவு படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், ஒரேயொரு தேசியப்பட்டில் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர், பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இது உலக ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரணில் பதவியேற்ற மறு நிமிடமே அமெரிக்கா வாழ்த்து தெரிவித்தது. தற்போது இந்தியாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,
‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது.