
சென்னை, மே 13
இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, ரூ. 80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்மா ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருட்களை அனுப்பி வைக்க குறித்த குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இந்த மாதம் இறுதிக்குள் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் அரிசி ரூ.33 ரூபா 50 சதம் என்ற அடிப்படையில் 40,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாவை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோகிராம் அரிசியை ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.
எனவே, இந்திய உணவுக் கழகத்திடமிருந்து அரிசியைக் கொள்முதல் செய்யும் பட்சத்தில் ரூ.54 கோடி மீதப்படுத்த முடியும்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவுக் கழகத்தின் அரிசி தரமற்றது எனவும், அரிசியைக் கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது தமிழக அரசு தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன்தான் அரிசி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசர நிலையின்போது, கொள்முதல் செய்ய விலைமனு வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்களிப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.