
யாழ், மே 30
இந்தியா என்பது எமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உதவி செய்பவர்கள் அல்ல. தங்களுடைய நலன்களை முதன்மைப்படுத்தியே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கச்சதீவை இந்தியா மீளப் பெறுவது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியதாவது,
எமது நாட்டு வளங்களை ஒருபுறம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வழங்கியுள்ளனர். இதனால் எமது நாடானது இந்தியாவிடமும் சீனாவிடமும் சிக்கி தவித்து வருகிறது. அத்துடன் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களுக்குள் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர்.
இந்த நிலையைப் பயன்படுத்தி இலங்கைக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு உபத்திரவம் செய்கின்ற வேலையை இந்தியா செய்கின்றது. தமிழகத்தின் முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், இலங்கை அரசாங்கம் பலவீனமடைந்து இருக்கும் போது தமிழ் மக்களின் காணிகளை மீட்டெடுப்பது தொடர்பாகவோ அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் செய்வதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தால் தொப்புள்கொடி உறவு என கூறமுடியும். ஆனால் அவ்வாறில்லாவிடில் தொப்புள்கொடி உறவு என கூறமுடியும் என்றார்.