பெண்ணொருவரை கொலை செய்து உரைப்பையில் இட்ட சந்தேகநபர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை சேர்ந்த சித்தி லைலா (55 வயது) என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர், கடை ஒன்றை நடாத்தி வருவதுடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

மேலும் சம்பவதினமான நேற்று (வியாழக்கிழமை) இரவு, குறித்த இளைஞன் பெண்ணிடம் சென்று பணம் கேட்டபோது இடம்பெற்ற வாக்குவாதத்தின் எதிரொலியாக அவரை கொலை செய்து, உரைப்பையில் இட்டு எடுத்துச் சென்று, நண்பன் ஒருவரின் கடைக்கு முன்னாள் மூட்டையை வைத்துவிட்டு, இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த மூட்டையை வைத்துவிட்டு சென்ற நண்பன் நீண்ட நேரமாகியும் எடுக்க வரவில்லை என்ற சந்தேகத்தில் மூடையை திறந்தபோது, அதில் சடலம் ஒன்று இருப்பதை அவர் கண்டுள்ளார்.

அதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு  அறிவிக்கப்பட்டதையடுத்து  அவ்விடத்திற்கு வருகை  தந்த பொலிஸார் மேற்கொண்ட மேலதிக  விசாரணையின் அடிப்படையில், 28 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *