பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் ஆரம்பம்! பேரணிகள் நடத்தத் தடை

 

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது

இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும்.

எனினும் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். 

இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியில் சிக்கல் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ்  தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் வேட்பு மனு கையளிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகில் மக்கள் ஒன்று கூடியிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பேரணி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட முற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *