விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கிராம சேவையாளர், பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது பாரிய இருப்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருட்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் தாங்கி புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலத்தில் மூன்று இடங்களில் தோண்டப்பட்டு எரிபொருள் தாங்கியில் இரண்டு இடங்களில் வெட்டப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.

16.3 அடிநீளமும், 7.9அடி விட்டமும் கொண்ட எரிபொருள் தாங்கி மீட்கப்பட்டுள்ளது. எரிபொருள் தாங்கியில் வெட்டப்பட்ட இடத்தில் மணந்து பார்த்தபோது மண்ணெண்ணைய் மணம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply