உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை’

உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை

 பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றுட் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்தரப்பில் செயற்படும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ‘சுதந்திர மக்கள் சபை’ என்ற பெயரில் புதிய அரசியல் பயணத்தை இன்று (02) ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பிற்காக முன்னிற்பதை இலக்காகக் கொண்டு தம்மால் இந்த புதிய அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

‘சுதந்திர மக்கள் சபை’ அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) கொழும்பில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர்களான சன்ன ஜயசுமண, சரித ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பதி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாபா பண்டார, கே.பி.எஸ்.குமாரசிறி, லலித் எல்லாவல ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

‘சுதந்திர மக்கள் சபை’ அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

‘கல்வி கற்ற சமூகத்தினர் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ளது.

எனவே எமது குழு தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்படும் என்று நம்புகின்றோம். அதற்கமைய நாம் எதிர்காலம் குறித்து சிந்தித்து சிறந்த தீர்மானங்களை எடுப்போம்.

இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் எமது நாட்டுக்கு பொறுத்தமற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்மையினாலேயே அதற்கு வாக்களிப்பதை புறக்கணித்தோம்.

எவ்வாறிருப்பினும் நாட்டுக்கு நன்மை ஏற்படக் கூடிய விடயங்களில் காலைவாறும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட மாட்டோம். நாட்டுக்காக எமது பொறுப்புக்களை நாம் உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றுவோம்.

எமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் சுதந்திரமாக தெரிவிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவ்வனைத்து விடயங்களை கவனத்திற் கொண்டே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் -என்றார்.

Leave a Reply