தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்ததால் கோட்டாவின் நிலைமையே: விமல்

கொழும்பு, செப் 5

எமது அரசியல் பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் வெகுவிரைவில் சிறிய அரசியல் கட்சிகளாகும். மக்கள் பலம் எதனையும் மாற்றியமைக்கும் ராஜபக்க்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து விட்டது.

தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்ததால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று இந்நிலையை எதிர்கொண்டுள்ளார் என மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது. ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும். முற்போக்கான. ஜனநாயக அரசியல் கட்சிகள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்று காலம் முதல் நாடு என்ற ரீதியில் நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.நாட்டின் பூகோள அமைவிடத்தின் காரணமாகவே இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் தேசிய வளங்களினால் பல்வேறு ஆக்கிரமிப்புக்களுக் நாடு உள்ளாகியுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றி கொண்ட வரலாறு காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் நாடு தற்போது மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு நெருக்கடி,எரிபொருள் நெருக்கடி முழு உலகத்தையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.முழு உலகமும் ஏதாவதொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தான் இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு,கௌரவமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே மேலவை மக்கள் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

பாரம்பரிய சம்பிரதாயங்களில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தற்போதைய சவால்களை வெற்றி கொள்ள முடியும்.முறைமை மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்,அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. தவறுகளுக்கு துணைபோவதை தவிர்த்துக் கொள்ளாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

பிரச்சினைகளை மாத்திரம் கூறிக் கொண்டிருக்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே கூட்டணியை அமைத்துள்ளோம். எமது பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் சிறிய கட்சிகளாகும்.நாட்டு மக்களால் எதுவும் முடியும்.

ராஜபக்க்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் நிறைவடைந்து விட்டது. குடும்ப ஆட்சியில்லாதவர்கள் தான் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகளவில் வணிக கடன்களை பெற்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.தோற்றம் பெறவுள்ள அனர்த்தங்களை கவனத்திற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி மாளிகையையும்,நாட்டையும் விட்டு வெளியேற நேரிட்டது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம். மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை கொண்டு பிற தரப்பினர் தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
ஆசிய பலத்துடன் ஒன்றிணைந்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.மேற்குலகத்தவர்களின் ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.

எமது கூட்டணியில் சகலரும் சமமாக மதிக்கப்படுவார்கள். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து சவால்களை வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். தேசிய உற்பத்திகளுக்கும்,பாரம்பரியத்துக்கும் முன்னுரிமை வழங்கி தன்னிச்சையான முறையில் முன்னேற்றமடைய சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். ஊழலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாவிடினும் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்க முடியும் என்றார்

Leave a Reply