
நாம் ஒவ்வொருநாளும் யாசகம் எடுத்துக்கொண்டும், கடனை வாங்கிக் கொண்டும் இருக்க முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் நாடு வங்குரோத்து அடைவதை விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம் -– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-
‘அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாகச் செயற்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்கப் புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருக்கின்றேன்.
மக்கள் தற்போதைய அரசியல் கலாசாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதேவேளை, இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சில தவறுகளால் பெரும் நன்மை இழக்கப்பட்டது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்தச் சபை அமைய வேண்டும்.
இலங்கை என்ற நாடு சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் வாங்கிக் கொண்டும் இருக்க முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் நாடு வங்குரோத்து அடைவதை விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம். இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்’ – என்றார்.
’ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது. 28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது ஆண்டு விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



