கொழும்பு, செப் 7
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.
மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன. விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான தன்மையில் அதிகரித்துள்ளன. ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூக மட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைபொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பாரதூரமானது. ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறுகிய காலத்தில் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுவார்கள்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் சமூக பாதுகாப்புக்கும்,சாதரண மக்களின் அன்றாட வாழ்வெக்கும் அச்சமூட்டும் நிலையில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



