பெரும்போக செய்கையை உரிய காலத்தில் ஆரம்பிக்குமாறு ஆலோசனை

கொழும்பு, செப் 8

பெரும்போக செய்கையை உரிய காலத்தில் ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பெரும்போக செய்கைக்கு தேவையான உரத்தை விவசாயிகளின் தேவைக்கேற்ப பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையிலிருந்தும் உரத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில நிறுவனங்கள் உர விநியோகத்தை நிராகரிப்பதாகவும் இலங்கையின் நிபந்தனைகளுக்கு இணங்குவதில்லை எனவும் அவர் கூறினார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் சிறுபோகத்திற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட உரத்தில் 10,000 மெட்ரிக் தொன் உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெரும்போகத்திற்கு முன்னர் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் விவசாயிகளுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைத்த 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைத்து 110 மில்லியன் டொலர் கடன் ஆகியவற்றினூடாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள பசளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் கிடைக்கும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே, உலக சந்தையில் உரத்தை முன்பதிவு செய்வதற்கான நாணய மாற்றுப் பத்திரத்தை திறப்பதற்கு தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் உயரதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply