இலங்கை தொடர்பான ஐ.நாவின் மனித உரிமை அறிக்கை-குற்றச்சாட்டுகளை மறுத்த அலி சப்ரி!

இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது என்றார்.

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக, விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டுவரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில், ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, பொது ஆய்வு, நிர்வாகத்தில் பங்கேற்பது மற்றும் ஊழலை எதிர்த்தல் ஆகிய முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப், இன்று (12) சமர்ப்பித்திருந்தார்.

அறிக்கையை முன்வைத்த அவர், இலங்கையின் நிலைமை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply