பிரித்தானியா அழைப்பு விடுக்கவில்லை: ரஷ்யா கண்டனம்

ரஷ்யா,செப் 18

மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்விற்கு ரஷ்ய இராஜதந்திரிகர்கள் எவருக்கும், பிரித்தானியா அழைப்பு விடுக்காமைக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு தமது உளபூர்வமான இறங்கலை வெளியிடும் இந்த தருணத்தில் ரஷ்யா முற்று முழுதாக ஓரங்கட்டப்பட்டமை கண்டனத்திற்கு உரிய விடயம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ரஷ்யாவை முற்றாக நிராகரிப்பதற்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், பிரித்தானிய மகாராணியாரின் இறுதி நிகழ்வில் தாம் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்திருந்தார்.

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்ததன் பின்னர், பிரித்தானியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டன.

ரஷ்யா போன்று சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணியாரின் எட்டு பேரப்பிள்ளைகளும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அவரது பேழைக்கருகாமையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இளவரசர்களான வில்லியமும், ஹரியும் அரச இராணுவ உடையில் உள்ள நிலையில், ஏனையவர்கள் கறுப்பு உடை அணிந்துள்ளனர்.

முன்னதாக மன்னர் சார்ள்ஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர், மகாராணியாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் 12 மணி நேரம் வரிசையில் இருந்தவர்களுடன் அளவளாவி தமது நன்றியினை வெளிப்படுத்தினர்.

இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று பிரித்தானியாவிற்கு வந்தவர்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஒருவர் என பிரித்தானிய உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தென் ஆபிரிக்கா கடந்த 1961 ஆம் ஆண்டில் குடியரசாக மாறுவதற்கு முன்னர் பிரித்தானியா நிறவெறி கொள்கை அமுல்படுத்தப்பட்டதால் 13 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செயல்பாடு காரணமாக பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பாக மகாராணியார் மன்னிப்பு கோர வேண்டும் என குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.

இந்த நிலையில், தென் ஆபிரிக்க ஜொகனஸ்பேக்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இளைஞர்களை கொண்ட குழுவொன்று, மகாராணியாரின் மரணம் குறித்து தமது துன்பியலை வெளிப்படுத்தியுள்ள போதிலும், இறுதி வரை மகாராணியார் தமது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் கடந்த காலம் பிரித்தானியா தமக்கு எதிராக செயல்பட்டதை தாம் முற்றாக மறந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

அதேவேளை, பிரித்தானிய மகாராணியின் நல்லடக்கம் இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு 11.59 க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply