
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது அவருடன் சில முக்கிய பிரமுகர்கள் மாத்திரமே சென்றிருந்ததாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
2ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவான தூதுக்குழுவுடன் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார், விசேட உதவியாளர், முப்படையினர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்த சர்வதேச விவகார பணிப்பாளர் ஆகியோர் மாத்திரமே இந்த சுற்றுப்பயணத்தில் இருந்ததாக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் பிரித்தானியாவில் இடம்பெறும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்காக சர்வதேச விவகார இயக்குனர் சுற்றுப்பயணத்தில் இணையவேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.



