சம்பளம் கொடுக்க கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை

கொழும்பு, செப் 21

நிதி நெருக்கடி காரணமாக அரசாங்க பணியாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பாரியளவிலான  கொடுப்பனவுகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.

Leave a Reply