இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்!

ஜப்பானின் GTN – Global Trust Network, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஜப்பானில் 1000க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர் வேலைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார, GTN – Global Trust Network இன் தலைவர் ஹிரோயுகி கோட்டோ, திறமையான தொழிலாளர் பிரிவின் முகாமையாளர் யுகா குவஹாரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​ஜப்பானிய அதிகாரிகள் 150 பராமரிப்பாளர்களுக்கு இந்த வருடமே வேலை வழங்கவும் அடுத்த ஆண்டு மேலும் 1000 தொழிலாளர்களை பணியமர்த்தவும் ஒப்புக்கொண்டனர்.

GTN – Global Trust Network, ஜப்பானின் முன்னணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் ஒன்றானது, ஜப்பானில் 350,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இவ்வாறானதொரு புகழ்பெற்ற நிறுவனத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு கிடைத்தமை பெரும் சாதனையாகும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்துடன் இணைந்து செயற்பட இலங்கை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply