அரசாங்கத்திற்குள் பல்வேறு கொள்கைகள், உரையாடல்கள் ஏற்பட வேண்டும் எனவும் அது ஆரோக்கியத்தின் அடையாளம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமை சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளிக்கையில்,
கூட்டணி அரசாங்கமாக இருக்கும் உலகில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்வாறு பல்வேறு கொள்கைகள் காணப்படும். பல்வேறு கொள்கைகளின் மோதல்களே ஆரோக்கியமான அரச நிர்வாகத்திற்கு காரணமாக அமையும்.
உதாரணமாக எமது அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டு வரப்பட்டது.
அப்போது இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாதிப்போ இடைவெளிகளோ ஏற்படவில்லை.
இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள கூட்டணி அரசாங்கங்களில் இப்படியான நிலைமையை காணமுடியும்.
கூட்டணி என்பது பல்வேறு கொள்கைகளின் கூட்டு. அதில் பல்வேறு கொள்கைகள், கருத்துக்கள் முன்வைக்கப்படலாம்.
இவ்வாறான கொள்கை மோதல்கள் இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகமாக கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.




