காணித்தகராறு கைகலப்பு: 3 பெண்கள் உட்பட 4 பேர் காயம்!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணித்தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நேற்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்துக்குச் செல்லும் வீதியில் குடும்பம் ஒன்று வசித்து வரும் காணிக்குள் நுழைந்து அடாத்தாக கொட்டகை ஒன்றை போடுவதற்குச் சிலர் முயன்றனர்.

இதனை, குறித்த காணியில் வசித்து வந்தோர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், தடுக்கச் சென்றவர்கள் மீது அங்கு வந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனப் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் தாய், பிள்ளைகள் என மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த காணி தொடர்பில் கடந்த சில மாதங்களாக ஒருவர் பிணக்கில் ஈடுபட்டார் எனவும், அவருக்கு ஆதரவாக வருகை தந்த சிலர் அத்துமீறி கொட்டகை அமைக்க முயன்றதுடன், தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

Leave a Reply