
பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்
இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கைது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, கொலைசெய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர்.
“சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை முகாமையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாளாகும். இது தொடர்பான விசாரணைகளை நான் கண்காணித்து வருகிறேன். அத்துடன் இதற்கு காரணமா அனைவரும் முழுமையான சட்டத்தை பிரயோகித்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.”
நேற்று (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிரியந்த குமார தியவதன எனும் இலங்கையரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
சியல்கோட்டிலுள்ள வசிராபாத் வீதியில், தனியார் தொழிற்சாலையொன்றின் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது தொழில் நிமித்தம் சியல்கொட்டில் வசித்து வரும் இவர், இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) பற்றியதாக தெரிவிக்கப்படும் சுவரொட்டி ஒன்றை கிழித்து குப்பைத் தொட்டியில் இட்டதால் அங்கிருந்தவர்கள் கோபமுற்று அவரை தாக்கியுள்ளதோடு, அங்கிருந்து தப்பியோடிய அவரை வீதியில் வைத்து தாக்கி கொலை செய்த கும்பலொன்று அவரை வீதியில் வைத்து எரித்துள்ளனர்.




