பண்டாரவளை – பூனாகலை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹல்தமுல்லை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார் மற்றும் யோகராஜ் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.