ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் சந்திப்பின் போக்கு தொடர்பாக மீண்டும் கூடிக் கலந்துரையாட முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஆரம்பித்த குறித்த கலந்துரையாடல் இரவு 10 மணிவரை நடைபெற்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இலங்கை அரசிற்கம் தமிழ்த் தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், தமிழர் தரப்பு எவ்விதமான நோக்கு நிலையில் அணுகுவது அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், கருத்தியலாளர்களுக்கும் இடையே இந்த கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் பா.கஜதீபன், க.அருந்தவபாலன், கே.பி.தவராசா உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகை பிரதம ஆசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.