ஈரானில் மற்றுமொருவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துடன் தொடர்புடைய இரண்டாவது நபருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று தெரிவித்து அந்த நாட்டின் அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில், மாஷா அமினி கோமா நிலைக்கு தள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் மாஷா சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 16ம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் உள்ள பெண்கள், ஹிஜாப் அணிவதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் களமிறங்கினர்.

மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக சமீபத்தில் ஈரான் அரசு பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் சரியாக அணிவதையும், இஸ்லாமிய சட்டங்களை சரியாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட “அறநெறி காவல்துறை பிரிவை”  கலைக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதுவரை நடந்த போராட்டத்தில் ஈரானின் பாதுகாப்பு படையினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் போராட்டத்தில் அத்துமீறியதாக கூறி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தூக்கு தண்டனையும் ஈரான் அரசு நிறைவேற்றி வருகிறது.

ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மொஷென் ஷெகாரி என்ற நபர், பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக தெரிவித்து அவருக்கு ஈரான் அரசு முதலில் தூக்கு தண்டனை வழங்கியது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது இரண்டாவது நபராக மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபருக்கு தூக்கு தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *