தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான முற்போக்கான முன்மொழிவுகளுடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருந்தால், தபால் தொழிற்சங்கங்களை சந்திக்க அரசாங்கம் தயாராக உள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்:
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் முன்னறிவிப்பின்றி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானதல்ல என்றார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதிகபட்ச மாதாந்த மேலதிக நேர வரம்பை 240 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமது ஆறு கோரிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என அமைச்சர் தெரிவித்தார்.
“தபால் திணைக்கள ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதன் வருடாந்த வருமானத்தை விட அதிகம். 2021 ஆம் ஆண்டில், திணைக்களத்தின் வருமானம் ரூ.7.1 பில்லியனாக இருந்தது.
அதே சமயம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் ரூ.12.8 பில்லியனாக இருந்தது. அந்த வருடத்துக்கான திணைக்களத்தின் மொத்தச் செலவுகள் மாத்திரம் சுமார் 15 பில்லியன் ரூபாவாகும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என உறுதியளித்த அமைச்சர், இந்த இக்கட்டான தருணத்தில் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கொள்கையை மீறுவதற்கு அமைச்சுக்கோ அல்லது தபால் திணைக்களத்திற்கோ முடியாது எனவும் தெரிவித்தார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.