கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில், உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் உள்ள கடற் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்களை இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது.
கடலட்டைப் பண்ணை அமைப்பு தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் கடலட்டைப் பண்ணையாளர்கள் ஆகிய நாங்கள் நேரடியாகவே கலந்துரையாடலுக்கு அழைத்தோம்.
கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறையகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றது.
எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது.
நமது பகுதிகளில் அட்டை வளர்ப்புக்காக உரிய அனுமதிகளுக்கு விண்ணப்பித்தும் அனுமதி பெற்றும் அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
சிலர் கடல் மாசடையும், மீன்வளம் பெருகாது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு அடி கடல் நீர் உள்ள சூடான பகுதியிலே அட்டை வளர்ப்பு இடம்பெறுகிறது.
சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவது மிகவும் சாத்தியம் குறைவு.
இதைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் மக்களை குழப்பும் வகையில் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சில பணியாளர்களுக்கு பண்ணைக்கு ஆவணவ ரீதியாக (பேப்பர் வேர்க்) நிறைவு செய்து கடலட்டை பண்ணையை அமைப்பதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும்.
மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் எடுத்தும், கடற்றொழில் அமைச்சராக இருக்கின்ற காலப் பகுதியில் எமது மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாராத்தினை உறுதிப்படுத்திவிட வேண்டும்.
ஆவண ரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில், தளுவல் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த தளுவல் அனுமதிகள் அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை.
கடற்றொழில் சங்கங்கள், நீரியல் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்து, குறித்த இடத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கப்படுகிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கட்றறொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன.
அதேவேளை, சிலரினால் எந்த திணைக்களங்களுடனும் தொடர்பு கொள்ளாமல் சிலரினால் தான்தோன்றித்தனமாக சில பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நாங்களும் அறிகின்றோம்.
அவை அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதனை கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தி இருப்பதை செய்திகளில் அவதானித்திருக்கின்றோம்.
குருநகர் மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் காணப்படும் கடல் அட்ட பண்ணைகள் கடல் தொழில் சங்கத்தின் அனுமதி நீரியல் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி பெற்றுச் செயல்படுத்தப்படுகிறது.
ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்குறது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.