ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு – 2022 இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவவதாரம் செய்து இருநூறாவது ஜனன ஆண்டிலே, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிறப்புமிகு ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் டிசம்பர் மாதம் 14, 15, 16 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நாவலர் பெருமான் அவதரித்த – நாளைக் கந்தன் திருவீதியுலா வரும் புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நிகழ்ந்தேறவுள்ளது.
நாவலர் பெருமானின் குருபூஜை நன்னாளிலே ஆரம்பமாகி ஜனன தின நாளிலே நிறைவு காணவுள்ள இம்மாநாடு நிகழ்வுகள் நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு என நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதையடுத்து, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் இன்று காலை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமானது.
நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும் நாவலர் பெருமானால் நம் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய கண்காட்சி நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெற்றது.
காலை 8.00 மணிக்கு நாவலர் பெருமானின் திருவுருவப் படம் தாங்கிய திருவூர்வல நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனிவந்தது.
நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களுக்கான குருபூஜை நிகழ்வுகளோடு ஆன்மிக அரங்கின் அரங்க நிகழ்வுகள், நல்லை ஆதீன முதல்வர் வணக்கதிற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் வணக்கத்திற்குரிய து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் தலைமையில், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
சமயப் பெரியார்கள், கல்விமான்கள்,இ அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்த இந்நிகழ்வில் ”நாவலர் சைவக்காவலர்’ எனும் தலைப்பிலான செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் சிறப்புரை, நூல் வெளியீடு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆகியவை நாவலர் கலாசார மண்டபத்திலே இடம்பெற்றது.