தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்- கஜேந்திரகுமார் ஆவேசம்!

எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய நினைவேந்தலில் போதே அவர் இந்த கருத்தினைத்  தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று நாங்கள் பாலசிங்கம் ஐயாவினுடைய நினைவு நாளை மேற்கொண்டிருக்கின்றோம். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய காலகட்டம் அவர் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்திற்கும் கையாளுகின்ற ஒரு நிலைமையாகத்தான் இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப்புலிகள் இயக்கம் யுத்தம் மௌனிக்கப்படாமல் ஒரு இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவும் தமிழ்ச்செல்வம் அண்ணையும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்திற்காக இந்த நிலைமைகளைக்கையாண்டு இருப்பார்கள்.

இதேபோன்று 2001 போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டத்திற்கு பிற்பாடு பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம் ஐயாவினுடைய தலைமையில் கூடுதலான பேச்சுவார்தைகளும் அதன் பிற்பாடு தமிழ்ச்செல்வன் அண்ணனுடைய தலைமையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்த பேச்சுவார்த்தைகள் நமைபெற்ற ஒவ்வொரு முறையும் தமிழ்த்தேசம் மட்டத்திலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

எங்களுடைய தேசத்தினுடைய உரிமை சார்ந்த விடயங்கள் எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி ஸ்ரீலங்கா அரசுடன் பேசி ஸ்ரீலங்கா அரசினுடைய உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக அமையும் என்கின்ற ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை எம்மிடம் இருந்தது. அதைத்தாண்டி சிங்கள பௌத்த தேசிய வாதம் தமிழ் மக்களுடைய நியாயத்தை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாகினால் தமிழ்த் தேசம் சார்பில் ஒரு மிகத்திறமான தீர்வைப்பெற்றுக்கொடுக்கக்கூடிய தரப்பு என்றால் அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே என்கின்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ஒரு உட்சபட்ச தீர்வு எட்டுவதாக இருந்தால் இயக்கம் தான் அதை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எங்களுடைய மக்களிடையே இருந்தது. தமிழீழ இயக்கத்தை விமர்சிப்பவர்கள்கூட தமிழ்த்தேசியம் என்கின்ற கோணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தான் தமிழ் மக்களுக்கு ஒரு உயர்ந்த தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் என்ற யதார்த்தத்தையும் உண்மையையும் அவர்களால் கூட மறுக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட தலைமைத்துவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கின்ற பொழுது இன்றைக்கு இருக்கக்கூடிய நபர்கள் உண்மையிலேயே அரசியல் கோமாளிகள். இனத்திற்கு வெட்கத்தை ஏற்படுத்துகின்ற நபர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். இனத்திற்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித்தலைவர்கள் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுடைய வாக்குகளையே பெற்று ஆட்சிக்கு வந்து அவர்களுடைய நலனினை கருத்திற்கொள்ளாமல் தங்களுடைய சுய இலாபங்களுக்காகவும் வேறு வேறு தேவைகளுக்காகவும் இனத்தை விற்கின்றவர்களாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு இனவாத கூட்டத்திற்கு கடமைப்பட்டிருக்கிநார் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தாலேயே நிராகரிக்கப்பட்டவர். அவருடைய பேச்சுவார்த்தையை நம்பி தமிழினம் சென்று ஒரு விட்டுக்கொடுப்பினைச்செய்தால் அது ஒரு நிரந்தர விட்டுக்கொடுப்பு. அதிலிருந்து நாங்கள் மீளவே முடியதா அளவிற்குத்தான் நிலைமைகள் இருக்கின்றது. ஆகவே இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதால் தமிழினத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. மாறாக போராடிக்கொண்டிருக்கின்ற சிங்கள இனத்திற்கு, அவர்கள் நிராகரித்தவருக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக காட்டுவதாகவே இந்த நிலைமை அமைந்து விடுகிறது.

அதே போன்று ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதாக இருந்தால் சிங்கள மக்கள் மட்டத்தில் மீண்டும் இனவாதத்தை கட்டியெழுப்பி, தான் சிங்கள மக்களின் காவலனாக வெளிக்காட்ட முனைவதே இவ்வாறான செயற்பாடுகளின் உள்நோக்காக இருக்கிறது.  

இவ்வாறான ஒரு நேரத்தில் தமிழினத்திற்கு எற்தவிதமான சாதகமான நிலைப்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதென்பது இனத்தினுடைய நன்மைக்காகவா என்கின்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்.

பேச்சுவாரத்தைக்கு போவதற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு போலி நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சமஷ்டியைத்தான் கேட்கப்போகின்றோம் அதை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் என்று விம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் சமஷ்டி தொடர்பில் அவர்கள் வாயே திறக்கவில்லை. முன்றாம்தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் பேசிக்கொண்டு பேச்சுவார்த்தையில் அவர்கள் வாயே திறக்கவில்லை என்பதையே இன்று ஊ்டகங்களுடைய தலைப்புச்செய்திகளும் வெளிப்படுத்தியிருக்கிறது.

பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அதைத்தவிர்த்த எங்களை விமர்சித்துக்கொண்டிருந்த ஊடகங்களே இன்று இதை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பேச்சுவார்த்தை மேசையில் நீங்கள் போய் அமர்ந்து கொள்வதனூடாகவே ரணிலுக்கான அங்கீகாரத்தை  கொடுப்பதாக அமையும் என்பதை இவர்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம்.அவர் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்.

ஆகக்குறைந்தது அந்த அங்கீகாரத்தை கொடுப்பதாக இருந்தால் இனத்திற்காக கொள்ளை ரீதியிலாகவாவது எங்களுக்கொரு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய சூழலையாவது உருவாக்காமல் அந்த அதிகாரத்தை கொடுப்பதானது எதிர்காலத்தில் எங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் நிறையதடைவைகள் கூறியிருந்தோம்.

ஸ்ரீலங்கா அரசு பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்ற இந்த தருணத்தில் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு சென்றது இனத்திற்கும் இந்த தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம்.

இவ்வாறான தருணத்தில்,  தமிழ் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எந்த சந்தர்ப்பத்திலும் மேற்கொண்டுவருகி்ன்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்கும் என்பதோடு மக்கள் நலன் கருதாத எந்தவொரு இடத்திலேயும் எவருக்காகவேனும் எந்தவொரு விட்டுக்கொடுப்மையும் கொள்ளைகள் சார்ந்து மேற்கொள்ளப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply