முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டை விலை தொடர்பான வழக்கு பிரசாந்த டி சில்வா மற்றும் கேமா ஸ்வர்ணாதிபதி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய, நேற்றைய தினம் கூடிய நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்ததாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்போது, முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா, அந்த விலைகளுக்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உடன்படவில்லை என நீதிமன்றுக்கு அறிவித்தார்.
வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும் அதனால் திருப்தியடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, மனுவை விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை பெப்ரவரி 6ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.