மூன்று லட்சம் அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை – இனி ஆட்சேர்ப்பும் இல்லை

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரச ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் கூறுகிறார்.

மேலும், ஐந்து வருட காலத்துக்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அறுபது வயதை அடையும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

Leave a Reply