எல்.பி.எல்.: இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி போட்டிக்கு முன்னேறியது தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின், வெளியேற்றுப் போட்டியில் தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி போட்டிக்கு முன்னேறியது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், இம்ரான் தஹிர் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சமிக்க கருணாரத்ன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் நஜிபுல்லா சத்ரான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர, நவீன் உல் ஹக், சீக்குகே பிரசன்ன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியில் 47 பந்துகளில் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜனித் லியனகே ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply