யாழ். மக்கள் அவதானமாக செயற்படுங்கள்: வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா எச்சரித்துள்ளார்.

இன்று யாழ். போதனா வைத்தியசாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாக காணப்படுகின்றது.

இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம். தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம்.

எனவே, நாய், பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

அதேபோல, டெங்கு காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

யாழ். போதனா வைத்திய சாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள்.

எனவே, பொதுமக்கள் தம்மை டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.

சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனோபிளிஸ் நுளம்பினால் பரப்பப்படுகின்ற நோயாகும்.

எனவே, யாழ்.போதனா வைத்திய சாலையினை சூழ உள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக கட்டடங்கள், புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் என்பவற்றில் நீர் தேங்கி, இந்த நுளம்பு பெருகும். மலேரியாவை எமது நாட்டில் மீண்டும் பரவ செய்யாது, சுற்று சூழலை பாதுகாக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டதால், உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை, 1963ஆம் ஆண்டளவில் மலேரியாவை கட்டுப்படுத்த முடியாததால் மீள பரவியது.

மலேரியா பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையினாலும், தற்போது நோயாளி இனங்காணப்பட்டுள்ளமையாலும், நாங்கள் நுளம்பினை கட்டுப்படுத்தவற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.

சுகாதாரப் பிரிவினர் நுளம்பு குடம்பிகளில் மலேரியா நோய் தன்மை உள்ளதா? என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

எமது முயற்சியின் பயனாகவே இதனை தடுக்க முடியும். மலேரியா நோய் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது கட்டாயமாக மலேரியா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மலேரியா நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதனால், இலங்கையில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து அதாவது மலேரியா தோற்று உள்ள நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக தமக்குரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு நோயாளி உள்ளதன் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலில் மலேரியா நோய்க் கிருமி தொற்றக் கூடிய ஏதுநிலை காணப்படலாம்.

ஆகவே, மாநகர சபையினர் யாழ் போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நுளம்பு பெருகும் குப்பை கூழங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

20 நாட்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்! சுகாதார அமைச்சு

Leave a Reply