மாகாண சபைகளால் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. மக்களின் வரிப்பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு சில அரசியல்வாதிகள் மட்டுமே கோடீஸ்வரர் ஆகினர் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபைகளால் நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. சில அரசியல்வாதிகள் மட்டுமே கோடீஸ்வரர் ஆகினர். மக்களின் வரிப்பணம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது. இந்தச்சிறிய நாட்டுக்குள் ஒன்பது மாகாண சபைகள் என்பது அநாவசியமாகும்.
இங்கு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் காரணம் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காகும். ஆனால், இது இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவதற்கு பதிலாக மேலும் மேலும் இனங்களுக்கிடையில் பூசலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழன் முதலமைச்சரா, முஸ்லிம் முதலமைச்சரா, என்ற இனவாதம் எழுவதற்கும் காரணம் மாகாண சபை முறையாகும்.
இத்தகைய கோசங்களால் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் கட்சிகளினதும் தமிழ் கட்சிகளினதும் சுக போகத்துக்காக மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, மாகாண சபை முறை இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை ஐக்கிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது என குறிப்பிட்டார்.





