மலையகத்தில் உள்ள ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, நோர்வூட் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த இரண்டு வாரகாலமாக லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எரிவாயு சிலிண்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் எரிவாயு தொடர்புடனான வெடிப்புச் சம்பவங்களால் எரிவாயு பாவனையாளர்கள் அச்சம் காரணமாக எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதில் அசமந்த போக்கே காணப்படும் நிலையில் இரண்டு வார காலமாக எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும் விறகு அடுப்புக்கும் மாறி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல எரிவாயு வர்த்தகர்கள் எரிவாயுக்கு பதிலாக விறகு விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலை தொடருமானால் எரிவாயுவில் இருந்து மக்கள் மாற்று வழிகளை கையாள்வார்கள் என்றும், இதனை நம்பி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த காலங்களில் பாரிய அளவில் எரிவாயு தட்டுப்பாடு நிலவியதுடன் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்தாவது, எரிவாயு தொடர்ச்சியாக கிடைக்குமென வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
இதனால் பலர் எரிவாயு கொள்வனவு செய்வதனை நிறுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வெற்று எரிவாயுக் கொள்கலன்களின் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளது.
அதனால் பலர் மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாறியுள்ளனர். இப்போது மண்ணெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
எரிவாயுவும் சந்தையில் இல்லை. மக்கள் எவ்வாறு தங்களுடைய சமையல் வேலைகளை செய்து கொள்வது.
எனவே, அரசாங்கம் பொதுமக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேநேரம், எரிவாயு இல்லாதன் காரணமாக பல எரிவாயு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





