இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய தரத்துடனான சமையல் எரிவாயு கொள்கலன்களே சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளிவ்.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தர நிர்ணய நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைய புதிய செறிமானம் காட்சிப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 30 சதவீத ப்ரோப்பென் செறிமானம் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உரிய செறிமானம் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, உரிய தரத்துடனான சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.





