ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான பொருளாதார சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி அரசில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கே மக்கள் இந்த அரசுக்கு வாக்களித்தனர்.
எனினும், கொரோனாத் தொற்று காரணமாக அரசு எதிர்பார்த்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அரசுக்குக் கிடைத்து வந்த வருமான வழிகளும் தடைப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் அனுபவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதற்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தலில் அரசுக்குக் கிடைக்கப்பெற்ற வாக்கு அலையுடன் வந்த சிலர், அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், பிரச்சினையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கின்றனரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
வியதமக எனத் தெரிவித்துக்கொண்டு பதவிகளை எதிர்பார்த்தே இவர்கள் அரசுக்குள் வந்திருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரின் நடவடிக்கையை மக்கள் இன்று நிராகரித்து வருகின்றனர்.
அத்துடன் வியதமக எனத் தெரிவித்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரின் நடவடிக்கையால் இன்று ஒட்டுமொத்த அரசும் மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கின்றது.
அதனால் மக்களின் பிரச்சினையை இனங்கண்டு அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான பொருளாதார சூழலையும் ஏற்படுத்திக்காnடுக்க வேண்டும்.
அரசு என்ற வகையில் அதனைச் செய்ய தவறினால் எதிர்க்கட்சிக்குச் செல்வதற்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.




