இலங்கையில் தீராத முட்டை பிரச்சினை – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தவறான கணக்கீடுகளினால் இந்த நாட்டில் முட்டைகளுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் அநுரசிறி மாரசிங்க குற்றம் சுமத்தினார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரகாரம் 50 ரூபாவாக இருந்த முட்டை தற்போது கட்டுப்பாட்டு விலையின்றி 55 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அநுரசிறி மாரசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவு காரணமாக நெருக்கடியாக இருந்த முட்டை விலை மேலும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இந்த நிலையில் முட்டை மற்றும் பண்ணை விலைக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை எனவும் அநுரசிறி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

முட்டை ஒன்றின் சில்லறை விலை 50 ரூபாவுக்கு மேல் செல்லாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க பொறுப்புடன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது முட்டை விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போதைய இந்த நெருக்கடிக்கு மூல காரணம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் தவறான கணக்கீடுதான். 100% தவறான கணக்கீடுகளால் நாடு முழுவதும் சிக்கலில் உள்ளது. 

ஊட்டச் சத்து குறைபாடு அதிகரித்துள்ள இவ்வேளையில், சத்தான உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டை இழக்கும் போது, ​​எதிர்காலத்தில் இந்த நாடு போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் மிகக் கடுமையான நிலைமைக்கு உள்ளாகும்.

நாங்கள் அப்பாவி ஏழை மக்களுக்காக பேசுகிறோம். இந்நிலையை உணர்ந்த நுகர்வோர் சேவை அதிகாரசபை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளது. இந்த விடயத்தில் இப்போதாவது தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply