தற்போது எதிர்நோக்கியிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் உள்ளகப் பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி உயர்நிலை அதிகாரிகளின் கடும் எதிர்ப்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
உடனடி நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெருமளவு நிதியைப் பெற்றால், தற்போது சீன மேற்கொண்டுவரும் சில அபிவிருத்தித் திட்டங்களை இழக்க நேரிடுமென்றும் அதனால் சீன அரசிடம் இருந்து வேறு நெருக்குவாரங்கள் உருவாகுமெனவும் மூத்த அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர்.
ஆனாலும் அந்த நிதிநெருக்கடிகளைச் சமாளித்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவது தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் மத்திய வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அரச தகவல்கள் கூறுகின்றன.
மூன்றாம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.





