போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகா பயந்து விட்டார்; நானே வெற்றிபெற்றேன்! சிவாஜிலிங்கம்

போர் குற்றவாளியான தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை எதிர்த்து கடந்த தேர்தலில் நான் போட்டியிட்டது, சரி என்பதை நான் உணர்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கெ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

போர் குற்றவாளியான இலங்கை அரசு ,அதனுடன் இணைந்த சிலர் தற்போது படிப்பறிவு பற்றி கதைக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக போர் குற்றத்தை முன்னின்று செய்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இது பற்றி தொடர்ச்சியாக பகிரங்க கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படிப்பறிவு அற்றவர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக போராடிய எமது விடுதலையா புலிகள் பெரிதாக படிக்கவில்லை என்று நினைக்கிறார்கள் போல.

ஆனாலும் நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதை மறக்க வேண்டாம்.பல்கலைக்கழக படிப்பை இடையில் நிறுத்தி விட்டு மக்களின் விடிவுக்காக போராடிய பலர் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளனர் என்பதை நான் நினனவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும், தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பில் தெரியுமா?

சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர் மக்கள் பிரதிநிதியாக செயற்படுவதோடு பொது நிகழ்வுகளில் ராணுவ உடையுடன் செல்லக் கூடிய இரட்டை வேடம் போடும் ஒரு நடிகராவார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள் பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல.

ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்.

தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15வது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து விட்டார். அவர் க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு பரீட்சைக்கு தோற்ற வில்லை.

அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்க வில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

உலகத்திலே இராணுவத்தின் உயர் பதவியான மார்சல் பட்டத்தினை பெற்றவராகவே உலகத்திலுள்ள அனைவரும் பிரபாகரனை பார்க்கின்றார்கள். ஒரு நிலையில் இருந்து கொண்டு ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை வழிநடத்தியவர் அவர்.

குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனே சேரும்.

எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும் அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

இதேபோல் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே ஏன் அவ்வாறு கூறவில்லை.

அவர் ஒரு நடிகர் இரட்டை வேடம் போடும் நபர் எனவே தான் அவர் தற்போது பூரண கருத்துக்களை தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக கூறி வருகின்றார் .

நாங்கள் இன்று மகிழ்கின்றோம் ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம் என்றார்.

Leave a Reply