இந்தியாவில் தீவிரமடையும் புதுவித நோய்த் தொற்று; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை SamugamMedia

கோவிட் போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் புதுவிதக்காய்ச்சலொன்று பரவி வருகிறது.

இவ்வைரஸ் காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது H3N2 எனப்படும் வைரஸினால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன.

இக்காய்ச்சல் காரணமாக ஹரியாணாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் என இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள், வளர்ந்தவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய இவ்வைரஸ், நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்நிலையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஜனவரி மாதம் முதல் பரு வகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இற்றை வரையும் 3,038 பேர் H3N2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலருக்கும் சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூவென்சா – ஏ வகையைச் சேர்ந்த H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன.

H3N2 வைரஸ் என்பது ஒரு பருவ கால காய்ச்சல் ஆகும். தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ள இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் பேசும் போது, இருமும் போது வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகளும் முதுமை அடைந்துள்ளவர்களும் இவ்வைரஸ் காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்படலாம்.

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல் வலி, சோர்வ வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம். 

இவற்றுடன் சேர்த்து மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர காய்ச்சல், நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகளும் கூட ஏற்பட முடியும்.

இவ்வைரஸ் காய்ச்சலுக்கு ஒருமுறை உள்ளானால் உடலில் அவ்வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தி உரு வாகிவிடும். அதனால் இவ்வைரஸ் மீண்டும் உடலுக்குள் வந்தாலும் அதனால் நோய் நிலையை ஏற்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி இடமளிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *