யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு..!

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்றையதினம்(03)  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பெரியபுலம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில்  தரம் 11இல் கல்வி கற்கும், மாணவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை.

இந்நிலையில்  கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  குறித்த மாணவனை பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார். இதனால் குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில், குறித்த மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்றிரவு (02) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார்.

அதேவேளை குறித்த மாணவன் இன்று அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகேயுள்ள காணியில்  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *